Search This Blog

Thursday, 12 September 2013

எந்த ஹீரோவும் எனக்கு சிபாரிசு செய்யவில்லை:ஓவியா

எந்த ஹீரோவும் எனக்கு சிபாரிசு செய்யவில்லை:ஓவியா

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை ஓவியா. களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தொடர்ந்து மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார். ஆனால் அதன்பின் தமிழில் பெரிய வாய்ப்பு இன்றி இருந்தவர் ஒரு சின்ன பிரேக்கிற்கு பிறகு தற்போது மூடர்கூடம், மதயானைக்கூட்டம், புலிவால் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் மூடம் கூடம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அவர் அளித்த பேட்டி இதோ...

* களவாணி படத்துக்கு பின், பெரிய அளவில் வெற்றிப் படங்கள் அமையவில்லையே?

என் முதல் படமான, களவாணி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. நல்ல பேர் கிடைத்தது. இதற்கு பின், மெரினா, கலகலப்பு போன்ற படங்களும், வெற்றி அடைந்தன.அடுத்ததாக, தற்போது நடித்து வரும், மூடர்கூடம் என்னை வேற ஒரு இடத்துக்கு அழைத்து போகும் என்ற நம்பிக்கை உள்ளது.

* கிராமத்து ரோல், சிட்டி ரோல் நடிப்பில் எது உங்கள் சாய்ஸ்?

ஓவியா, கிராமத்து ரோல் மட்டும் தான் செய்­வாங்க என்ற இமேஜ், எனக்குகிடையாது. நடிக்க வந்து விட்டால், எல்லா விதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். இப்போது,கிளாமரான கேரக்டர்களில் கூட நடிக்கிறேன். எனக்காக தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களை நான் ஏமாற்ற மாட்டேன்.

* உங்களுக்கும், விமலுக்கும் அப்படி என்ன ஒரு ஸ்பெஷல் கெமிஸ்ட்ரி?

அய்யோ இந்த கேள்வியை கேட்டு கேட்டு எனக்கே போரடிச்சுப் போச்சு. நீங்க நினைக்கிற மாதிரி, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. என் கூட நடிக்கிற எல்லா ஹீரோக்களையும் நல்லா புரிஞ்சுக்கிட்டு, நன்றாக நடிக்க வேண்டும் என நினைத்து நடிப்பேன். என் முதல் ஹீரோ என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர் அவ்வளவு தான்.

* உங்களுக்கு எந்த ஹீரோவாவது பட வாய்ப்புகளுக்கு சிபாரிசு செய்வது உண்டா?

நிச்சயமா இல்லை. மற்றவங்களுக்கு எப்படின்னு தெரியல. எனக்கு ஹீரோ சிபாரிசு செய்து படங்கள் வந்தது இல்லை. இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தான் என்னை தொடர்பு கொண்டு பேசுவாங்க. அவங்க கதைக்கு பொருத்தமா நான் இருப்பேன்னு தெரிஞ்சா யார் சிபாரிசும் தேவை இல்லை. இதுவரை எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சது இல்லை.

* தமிழ் நல்லா பேசுறீங்க. ஆனால், பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லையே?

ஒரே ஆண்டில் நான்கு, ஐந்து படங்கள் செய்யணும்ன்னு ஆசை கிடையாது. யார் ஹீரோ புதிய இயக்குனரா பழைய இயக்குனரா அப்படின்னு எல்லாம் பார்க்க மாட்டேன். கதை எனக்கு பிடிச்சா போதும். சமீபகாலமாக நிறைய புதுமுகங்கள் ஜெயிக்குறாங்க. நல்ல நல்ல படங்களா எடுக்குறாங்க. எனக்கு வாய்ப்பு வரவில்லை என்றால் வீட்டிலே உட்கார்ந்திருப்பேனே தவிர தப்பான படம் எதிலும் நடிக்க மாட்டேன்.

* உங்க கூட அறிமுகமான பல நடிகைகள் பிசியா ஆகிட்டாங்க. உங்களுக்கு அந்த வருத்தம் இருக்கா?

என் கூட அறிமுகமான பல நடிகைகளுக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது உண்மை தான். அதற்காக சந்தோஷப்படுகிறேன். எனக்கு வர்ற வாய்ப்புகள் எனக்கு வரும். மற்றவர்களை ஒப்பிட்டு என்னால பார்க்க முடியாது. எந்த ஆதரவும் இல்லாமல் இந்த அளவுக்கு, தமிழ் ரசிகர்களிடம் சேர்ந்து இருக்கேன் என்பது பெருமையா இருக்கு. சந்தோஷமா இருக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment