இப்போது வரும் காமெடிகளை பார்த்தால் சுகர், பிரஸர் எல்லாம் கூடி விடுகிறது - வடிவேலு பேட்டி!!
தற்போது சினிமாவில் வரும் காமெடிகளை பார்த்தால் சுகர், பிரஸர் எல்லாம் கூடி விடுகிறது என வடிவேலு கூறியுள்ளார். விஜயகாந்த்தை எதிர்ப்பதாக நினைத்து தி.மு.க.,வுக்கு ஆதரவாக அரசியல் பிரசாரம் செய்து அதனால் படவாய்ப்பே இல்லாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டவர் நடிகர் வடிவேலு. இரண்டு ஆண்டுகால வனவாசத்திற்கு பிறகு பல கதைகளை கேட்டு இப்போது ஜகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில், தெனாலிராமன் மற்றும் கிருஷ்ணதேவராயர் என இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். யுவராஜ் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நாகையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், தற்போது ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் ஷூட்டிங் 65 சதவீதம் முடிந்து விட்டது. பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம். போகும் இடமெல்லாம் நீங்க இல்லாத குறையே தெரியல என்று தான் சொல்கிறார்கள். என் படங்களின் காமெடியை பார்த்தால் சுகர், பிரஸர் போன்ற நோய்கள் எல்லாம் குறைந்து போய்விடுகிறது என்று பலரும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இப்போது படங்களில் வரும் காமெடியை பார்த்தால் சுகர், பிரஸர் எல்லாம் கூடி விடுகிறது என்றார். மேலும் இந்த இரண்டு ஆண்டு கால இடைவெளியில் எனது குடும்பத்துடன் நன்கு செலவழித்தேன். அதில் கிடைத்த சந்தோஷம் அளவில்லாதது. தெனாலிராமன் படம் திரைக்கு வந்த பிறகு அடுத்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யவுள்ளேன். இனி தொடர்ந்து நிறைய படங்களில் நடிப்பேன் என்று கூறினார்.
No comments:
Post a Comment