கல்வீச்சில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டும் டிரைவர்கள்
அரியலூர்: கல்வீச்சில் இருந்து தப்பிக்க அரியலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ் டிரைவர்கள் ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டுகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு, சாலை மறியல், வாகனங்களுக்கு தீ வைப்பு, வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.இதனால் அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் மாலை 6 மணிக்கு மேல் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடக்கும்போது பெரும்பாலும் பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளே அதிகம் உடைக்கப்படுகின்றன. இதையடுத்து கல்வீச்சு சம்பவங்களின்போது டிரைவர்களுக்கு காயம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், போக்குவரத்து கழகம் சார்பில் அரியலூர், ஜெயங்கொண்டம் பணிமனையில் நேற்று டிரைவர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக நீண்ட தூரம் செல்லும் பஸ்களின் டிரைவர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. இதையடுத்து டிரைவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பஸ்களை ஓட்டி சென்றனர்.
No comments:
Post a Comment