ஏங்க.. தயாரிப்பாளர் சங்கத்தையே காணலிங்க...! - பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர் பேச்சு
'தயாரிப்பாளர் சங்கம் இருக்கான்னே தெரியல... நாங்க யார்கிட்டே, எங்கே போய் முறையிடுவது என்று தெரியவில்லை,' என்று படவிழாவில் ஒரு தயாரிப்பாளர் பேசியிருப்பது பரபரப்பு கிளப்பியுள்ளது.
அந்த தயாரிப்பாளர் பெயர் சுரேஷ் காமாட்சி. கங்காரு என்ற படத்தை இவர் தயாரித்து வருகிறார்.
நேற்று பிரசாத் லேபில் நடந்த 'பாக்கணும் போல இருக்கு' படத்தின் இசை வெளியீட்டின்போதுதான் இப்படிப் போசினார் சுரேஷ் காமாட்சி.
அவர் பேச்சு விவரம்:
"இங்கு சிறு முதலீட்டுப் படங்கள் வருவதுதான் சினிமாவின் வளர்ச்சி என்றார்கள். தயாரிப்பாளர் சந்திரசேகர் நிறைய படங்கள் எடுத்து வருவதாகவும் கூறினார்கள். நாங்கள் எடுக்கத் தயார்தான். புதியவர்கள் பலரையும் அறிமுகப்படுத்தவும் தயார்தான். ஆனால் வியாபார ரீதியாக ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். யாரிடம் சொல்வது? தயாரிப்பாளர் சங்கம் உதவுவதில்லை. அதைக் காணவில்லை. முகவரி தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் ஊடகங்களை மட்டுமே நம்பி எடுக்கிறோம் .மற்றபடி எங்களுக்கு உதவ எந்த சங்கமும் வருவதில்லை,"என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்போது கேயார் தலைவராக உள்ளார். ஆளும் கட்சியின் ஆசி பெற்றவர் இவர். டி சிவா, ஞானவேல்ராஜா என புதிய நிர்வாகிகள் பலர் வந்துள்ளனர்.
சிறிய முதலீட்டுப் படங்களுக்கு உதவ நாங்கள் கூடிப் பேசாத நாளில்லை.. போடாத திட்டமில்லை என தினந்தோறும் ஏதாவது ஒரு விழா மேடையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முழங்கிக் கொண்டிருக்க, தயாரிப்பாளர் சங்கத்தையே காணலீங்க என சுரேஷ் காமாட்சி பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவர் பேச்சுக்கு சிறு முதலீட்டு படத் தயாரிப்பாளர்கள் ஆதரவு கிளம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது!
No comments:
Post a Comment