படப்பிடிப்பில் திடீர் வெடி விபத்து விஜய்–மோகன்லால் உயிர் தப்பினார்கள் 5 பேர் காயம்
‘ஜில்லா’ படத்துக்காக கோவில் திருவிழா காட்சியை படமாக்கியபோது, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் விஜய், மோகன்லால் இருவரும் உயிர் தப்பினார்கள். 5 பேர் காயம் அடைந்தார்கள்.
படப்பிடிப்பு
விஜய்–மோகன்லால் இணைந்து நடிக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழா காட்சிக்காக கோவில், தேர், மண்டபங்கள், கடை வீதிகள் போன்ற பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், மகத், சூரி, தம்பி ராமய்யா ஆகியோருடன் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்–நடிகைகள் பங்கேற்று நடித்து வந்தார்கள். தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களை சேர்ந்த வாத்திய கலைஞர்களும் கலந்துகொண்டார்கள்.
வெடி விபத்து
‘‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா…எதிர்த்து நின்னவன் தூசுடா’’ என்ற பாடலுக்கு ஏற்ப விஜய்–மோகன்லால் ஆகிய இருவரும் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது பல வண்ணங்களில் வாண வேடிக்கை நடைபெறுவது போல் ஒரு காட்சி படமாகிக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக வாண வேடிக்கைக்காக வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறின.
அதில், துணை நடிகர்கள் 5 பேர் காயம் அடைந்தார்கள். விஜய், மோகன்லால் இருவரும் காயமின்றி தப்பினார்கள். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தீக்காயம் அடைந்த அந்த 5 பேரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். இந்த விபத்து படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறிது நேர ஓய்வுக்குப்பின், படப்பிடிப்பு மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.
No comments:
Post a Comment