பொங்கல் முன்பதிவு ரயில் டிக்கெட்டுகள் ஹவுஸ்புல்
திருநெல்வேலி: பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு வருவோருக்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு சிலநிமிடங்களில் முடிவடைந்தது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு வருகின்றனர். இந்த பண்டிகை காலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் பண்டிகை அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை எடுக்க வசதியாக உள்ளது. ஏனெனில் போகி பண்டிகை வரும் ஜனவரி 13ந் தேதி திங்கள் கிழமையும், பொங்கல் பண்டிகை 14ந் தேதி செவ்வாய் கிழமையும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முன்புள்ள இரு நாட்களும் பொது விடுமுறை என்பதால் அவர்கள் எளிதாக ஊர் வந்து விடுவார்கள்.
தென் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் பொங்கலுக்கு மொத்தமாக 5 நாட்கள் விடுமுறை எடுத்து வர வாய்ப்பு உள்ளது. பொங்கலுக்கான முன்பதிவு இரு நாட்களுக்கு முன்பு துவங்கி விட்டது. கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment